Monday, 1 August 2016

Guru peyarchi 02-08-2016

ஆடிமாதமும் குருப்பெயர்ச்சியும்

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் வாக்கிய சித்தாந்தப்படி வரும் துர்முகி வருடம் ஆடி மாதம் 18-ஆம் தேதி, 02-08-2016 செவ்வாய்கிழமை காலை 09.27 (08.37 நாழிகைக்கு ) கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி 02-09-2017 வரை கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யுவுள்ளார். கன்னியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக துலா ராசியில் 17-01-2017 முதல் 10-03-2017 வரை சஞ்சரிக்க உள்ளார்.
(திருக்கணிதப்படி 11-08-2016 முதல் 11-09-2017 வரை).

கன்னி ராசிக்கு மாறும் குரு வால் அதிகம் ஆதாயம் அடையும் ராசியினர்/ குருபலம் பெறும் ராசியினர் - ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம்

 ரிசபம் ராசியினருக்கு ராசிக்கு ஐந்தாம் ராசிக்கு குரு வருகிறார்...இது குருபலமாகும்...-எங்கும் எதிலும் வெற்றி,நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்..

சிம்மம் ராசியினருக்கு தன குடும்ப ஸ்தானத்தில் குரு வருகிறார்...கடன் பிரச்சினைகள் தீர்க்கும் வருமானம் அதிகரிக்கும்..

விருச்சிகம் ராசியினருக்கு லாபஸ்தானத்தில் குரு வருகிறார் லாபம் அதிகரிக்கும் வருமானம் உயரும்,.கடன்கள் அடைபடும்...தொழில் சிக்கல் தீரும்.

மகரம் ராசியினருக்கு பாக்யஸ்தானத்தில் குரு வருகிறார் இதுவரை அமையாத பாக்யம் ஒன்று அமையும்...கிடைக்காத ஒன்று இல்லாத ஒன்று கிடைக்கும்...தெய்வ அருள் உண்டாகும்...

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிந்த பின்னர் வரும் நல்ல காலம்.7ல் வரும் குரு பகவான் தொழில் சிக்கல்களை நீக்கி உயர்வை கொடுப்பார்..

மேஷம் - எதையுமே உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும் என்றாலும், அதற்காக அஞ்ச வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

ரிஷபம் - எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்கள் நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப்படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார். இதனால் உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மிதுனம் - யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுபவர்கள், நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பிரச்னைகளை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம்.

கடகம் - உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள், நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

சிம்மம் - காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்கள் நீங்கள். இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நிறைவேறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி - கலாரசனை உள்ளவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.

துலாம் - நடுநிலைமை தவறாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றியதுடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம் - கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புகழும் செல்வாக்கும் கூடும். மழலை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு - வளைந்து கொடுக்கத் தெரியாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

மகரம் - மனச்சாட்சிப்படி நடப்பவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மன இறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம் - மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும், பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

மீனம் - இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், தன்னம்பிக்கை கூடும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.

ஆடி மாதமென்றாலே அம்மன் மாதம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த வருட ஆடி மாதத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது. ஆடி பெருக்கு, குருப்பெயர்ச்சி, ஆடிஅமாவாசை என 3 நிகழ்வுகளும் இந்த ஆடி மாதத்தில் நிகழ்கிறது. தமிழிற்கு ஆடி 18 அன்று ஆடிஅமாவாசை வருகிறது. (ஆங்கிலத்திற்கு 02/08/2016.) ஆடிஅமாவாசையன்று கட்டாயமாக முன்னோர்களிற்கு தர்ப்பணம் கொடுங்கள். ஆடி அமாவாசையின் சிறப்பு என்னவென்றால் கடகத்தில் உள்ள சூரியனுடன் ஆட்சி பெற்ற சந்திரன் இணைவதாகும். இக்காலத்தில் முன்னோர்களின் ஆத்மாக்கள் பூமிக்கு வரும். அவர்களிற்கு நாம் தர்ப்பணம் கொடுக்க அவை திருப்தியடைந்து நம்மை வாழ்த்தும். அன்று இரவு வீட்டில் வெளியில் ஒரு செம்பினுள் நீர் வைக்க வேண்டும். அத்துடன் ஆண்கள் கோதுமை தவிடு, பச்சரிசி தவிடு, வெல்லம், அகத்திக்கீரை கலந்து ஆண்கள் தானம் செய்ய வேண்டும். பெண்கள் சுமங்கலபொருட்களை தானம் செய்ய வேண்டும். இதனால் நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைப்பதோடு அவர்களின் ஆசியால் எமது வாழக்கை வளமடையும்.

ஆடிப்பூரத்தில் தானம் செய்வது அஷ்டலக்மியையும் திருப்திப்படுத்தும். சகல சம்பத்துக்களும் தேடி வரும். ஆடிப்பூரமானது வரும் ஆடி 21ம் திகதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்நன்னாளில் இயலுமான வஸ்துக்களை அனைத்து உயிர்களுக்கும் தானம் வழங்கலாம்...
(ஆங்கிலத்திற்கு 5/8/2016)

பட்டுக்கு அதிபதியான குருபகவான் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கும் குருப்பெயர்ச்சி அன்று குருபகவானின் விசேட திருத்தலங்களிலோ அல்லது சிவன் கோவிலில் உள்ள நவக்கிரக வாயாழ பகவானுக்கும் சிவனுக்கும் அல்லது குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டு சேர்ப்பித்து உங்கள் நட்சத்திரம் கூறி வழிபட நன்மை வந்து சேரும். அன்றைய நாள் ஆதரவற்ற குழந்தைகள்,முதியோர்களுக்கு அன்னதானம் ,மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது சிறப்பு. கோவில்களில் நடைபெறும் குருப்பெயர்ச்சி யாகத்தில் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

Thursday, 23 June 2016

Read and feel the Mother's nature

நான் படித்ததும் கண் கலங்கிய கதை...!!

இன்னிக்கு காலையில கடைத்தெருவிற்கு சென்றேன். அங்கு கடைக்கு எதிரில் ஒரு குப்பைத்தொட்டியில் ஒரு நாய் ஒன்று உணவு தேடிகிட்டு இருந்தது. அங்கு பக்கத்தில் விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதை பார்த்ததும் கல்லை எடுத்து எடுத்து எறிந்தனர். அந்த கல் அந்த நாயின் காலில் பலமாக அடிபட்டது. காலில் இரத்தம் சொட்ட ஒட முயன்ற அந்த நாய் வலியிலும் குப்பையில் கிடந்த எதோ ஒரு உணவு பொட்டலத்தை வாயில் கவ்விக்கொண்டு நொன்டிகொண்டே ஓடியது.

அந்த சிறுவர்களிடம் இப்படில்லாம் செய்யாதீர்கள் அது பாவம் என்று கூறிவிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு எனது வண்டியை எடுத்தேன். நாய் சென்ற வழியில் சென்றேன் சிறிது தூரம் சென்றதும் அந்த நாய் ஒரு புதரின் அருகில் நிற்பதை பார்த்தேன். அதை பார்த்ததும் என் மனம் கலங்கியது. அங்கு ஐந்து நாய் குட்டிகள் இருந்தது. அந்த நாயின் குட்டிகள் என நினைக்கிறேன்.

அது கவ்விக்கொண்டு வந்த உணவு பொட்டலத்தை குட்டிகள் சாப்பிட்டு கொண்டிருந்தன. அந்த நாயின் தாய்மை பாசத்தை நினைத்து கண்கள் கலங்கியது. நான் கொண்டுவந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அந்த நாயின் அருகில் சென்றேன். வலியில் அந்த நாயின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் என் மனம் வருந்தியது. அதோட கண்ணை பாருங்க உங்களுக்கு புரியும் அதோட வலி. அதுவும் ஒரு உயிர் ஜீவன் தானே. அதற்கு நம்மால் உதவ முடியலைனாலும் பறவாயில்லை இந்தமாதிரி செய்யாதீர்கள். இது ஏதோ சிறுவர்கள் செய்த தவறு தான் ஆனாலும் சில அறிவாளிகளும் இப்படி செய்கின்றனர். அது தவறு என்பதை இனிமேலாவது உணருங்கள். உஙகளால் முடிந்தால் உங்கள் தெருவில் உள்ள நாய்க்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் இல்ல பழைய சோற்றை போடுங்க அது உங்க வீட்டை பாதுகாத்து நன்றியுடன் இருக்கும்.
-

Saturday, 4 June 2016

Krishna story 14

லீலை கண்ணன் கதைகள்.....14
பூதனை என்ற அரக்கியின் வதம்....

சென்ற பதிவில் நந்தகோபர் மதுரா சென்று கம்சனுக்கு கப்பம் கட்டிவிட்டு, வசுதேவரை பார்த்து இருவரும் நலம் விசாரித்தனர். நந்தகோபர்  மதுராவிலிருந்து கோகுலத்திற்கு வருவதற்குள் இங்கு கிருஷ்ணன் ஒரு லீலை பண்ணிட்டான் அதை இந்த பதிவில் பார்ப்போம்.

பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கம்சன் கொல்ல விரும்பினான். அதனால் பூதனை என்ற அரக்கியை வரவழைத்தான். தன் திட்டத்தை அவளிடம் சொன்னான். அவனுக்கு உதவ அவளும் இணங்கினாள். உடனே அவள் ஓர் அழகிய பெண்ணைப் போலத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு குழந்தைகளைத் தேடி நகரங்களில் அலைந்தாள். எந்த உருவம் வேண்டுமானாலும் எடுக்கும் சக்தியைக் கொண்டவள் அவள். ஒரு நாள் அவள் எல்லா நகரங்களையும் பார்த்துக் கொண்டே ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தாள். அப்போது அவள் கோகுலத்தை பார்த்தாள். அதற்கு முன்னர் அவள் அங்கே சென்றதில்லை. அதனால் கீழே இறங்கினாள். ஓர் அழகிய பெண்ணாகத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு நந்தகோபர் வீட்டிற்குள் நுழைந்தாள். திருமகளே வந்துவிட்டதாக அவளைப் பார்த்து யசோதை நினைத்தாள். கோகுலத்து கோபிகைகள் எல்லார் மனதையும் அவள் கவர்ந்துவிட்டாள்.

குழந்தை கிருஷ்ணன் தொட்டிலில் படுத்திருந்தான். பூதனை சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் பக்கத்தில் இல்லை என்று தெரிந்ததும்   தொட்டிலில் இருந்த குழந்தையை கையில் எடுத்தாள். கீழே உட்கார்ந்து குழந்தையைத் தன் மடியில் கிடத்தினாள். விஷம் தடவியிருந்த தன் மார்பகங்களில் குழந்தையின் வாயை வைத்து அதனால் பாலுட்டத் தொடங்கினாள். இந்த வகையில் அவள் குழந்தையைக் கொல்லப் பார்த்தாள். ஆனால் துஷ்டர்களைக் கொல்லுவதற்காக வந்துள்ள பகவானை யார் கொல்ல முடியும்? கிருஷ்ணன் தன் இரு சிறு பிஞ்சுக் கையினால் அவளுடைய மார்பகத்தைப் பற்றிக் கொண்டு, பாலை உறிஞ்ச ஆரம்பித்தான்.

சில நொடிகளுக்கெல்லாம் குழந்தை தன் உயிரையே உறிஞ்சிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். வலி தாங்காமல் கத்தினாள். "போதும் போதும் என்னை விட்டுவிடு" என்று அலறினாள். அலறிக் கொண்டே அவள் குழந்தையைத் தன் மார்பகத்திலிருந்து எடுக்கப் பார்த்தாள். ஆனால் கிருஷ்ணனோ பால் குடிப்பதை நிறுத்துவதாக இல்லை. இன்னும் அதிக சந்தோஷத்துடனும் மும்முரத்துடனும் அவன் பால் குடிக்க ஆரம்பித்தான். அப்பொழுது  அவள் அலறல் சத்தத்தினால் பூமியே அதிர்ந்தது. பூதனை தன் உண்மை உருவமான அரக்கி உருவம் பெற்று செத்து கீழே விழுந்தாள். ஆனால் பயமற்ற அந்தக் குழந்தையோ அவள் உடலின் மீது அங்கும் இங்கும் தவழ்ந்து சென்று விளையாடத் தொடங்கியது.

பூதனை குரலைக் கேட்டு யசோதை அங்கு ஓடி வந்தாள். குழந்தையை கையிலெடுத்துக் கொண்டு அப்பால் சென்றாள் . குழந்தைக்குப் பால் புகட்டிவிட்டு, அதைப் பட்டாடையினால் மூடித் தூங்கச் செய்தாள். ஒன்றுமே நடக்காதது போல குழந்தை நிம்மதியாகத் தூங்கிற்று. அப்போதுதான் நந்தகோபர் மதுராவிலிருந்து திரும்பி வந்தார். அரக்கி செத்துக் கிடப்பதைப் பார்த்து அவர் நடுங்கினார். உடனே அவர் ஆயவர்கள் பலரை அழைக்க அவர்கள் அந்தப் பூதாகாரமான உடலை மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கி வெளியே எடுத்து சென்று சிதையின் மீது வைத்து எரித்தார்கள்.

அந்த அரக்கி எப்படி ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து எல்லோரையும் ஏமாற்றிவிட்டாள் என்று எல்லோரும் நந்தகோபருக்குச் சொன்னார்கள். பெரிய ஆபத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றினதற்காக அவர்கள் எல்லோரும் கடவுளை துதித்தார்கள். எல்லாத் தீய அரக்கர்களையும் அழிப்பதற்காக வந்த கடவுள்தான் அந்தக் குழந்தை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.............

இறை பணியில்
வாசு ஜி.

Sunday, 22 May 2016

Mahaperiyava Jayanthi May 22nd, Nama Japa

image

Bhagawan Nama 
பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும், அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்- ஸ்ரீ மஹா பெரியவா
தர்மமே தெரியல!
ஸ்ரீ மஹா பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை.
“அப்பா எப்டியிருக்கார்?”…
“அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடிலே பெரியவா……ப்ரக்ஞை இல்லே; அதுனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்…”
மேலே சொல்லு என்பது போல் ஸ்ரீ மஹா பெரியவா உன்னிப்பாக கேட்டார்.
“…பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா…..ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம்; ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம்; அதுக்கு இதுக்குன்னு நின்னா, ஒக்காந்தா பணம் ஒண்ணுதான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து…”
“அப்பாவுக்கு என்ன வயஸ்?”
“ஸதாபிஷேகம் ஆய்டுத்து”
“அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமம் இல்லாதபடி ஸௌகர்யமா படுக்க வை; ஜாஸ்தி சூடு இல்லாம, வெதுவெதுன்னு கஞ்சி, பால் இதுமாதிரி நீர்க்க குடு; அவரோட காதுல விழறா மாதிரி தெனோமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு; ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ; ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு; இப்டி பண்ணினியானா …….ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார்…..”
மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.
அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார்…..
“இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்….சம் அஸௌகர்யம் வந்துடுத்துன்னா……ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்…வாஸ்தவம். ஆனா…..அருமருந்து ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!…..”
பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும், அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்.
எனவே, உடல் நிலை ஸரியில்லாதவர்களை குறிப்பாக வயஸான நம் பெற்றோர், தாத்தா,பாட்டி போன்றோரை, வயஸான காலத்தில் கஞ்சி குடுத்தாலும், அதை அன்போடு குடுத்து, பகவானின் நாமத்தை ஸதா கேட்கவோ, சொல்லவோ வைத்து, அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம்.
அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம், விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி, “ஸாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா?” என்று கேட்பதே அவர்களை மனஸார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட, அது குச்சு வீடாக இருந்தாலும் ஸரிதான், தன் மக்களை விட்டுவிட்டு, வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்த்ரசேகராய!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர .. ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கர.
ஸ்ரீ மஹா பெரியவா எனக்கு அபயம் கொடுத்து காத்து ரக்ஷிப்பாய் பரம கருணா சாகரா.
ஸ்ரீ மஹா பெரியவா சரணாரவிந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

இறை பணியில்
வாசு ஜி.

Saturday, 14 May 2016

Simple technic to speak to ur subconscious mind

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை



ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!


ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...

இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்


Friday, 13 May 2016

Lord Krishna showed how will be Kaliyuga

கலியுகம் எப்படி இருக்கும்?

ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண்முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து, பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து தள்ளி, வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன், தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான்,

இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும், ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.

”அர்ஜுனா, கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்.” –குயிலை போல.

”பீமா, கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும், அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.” – வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.

நகுலா, “கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண்மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள்.” -பசுவை போல்.

”நகுலா, கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுதமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்.” பாறையை தடுத்த சிறுசெடியை போல்.

இறை பணியில்
வாசு ஜி.

Wednesday, 4 May 2016

What is Happiness?!!

எது மகிழ்ச்சி??
.*******************
கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.

அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.

பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.

அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.

சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.

அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.

இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.

இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.

நீதி : உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.

எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்...

இறை பணியில்
வாசு ஜி.